Sanju Samson: போட்டியில் விளையாட விருப்பமில்லை என்றால் ஒதுங்கிக் கொள்ளுங்கள் என சஞ்சு சாம்சனிற்கு சிஎஸ்கே ரசிகர்கள் அட்வைஸ் செய்ய தொடங்கியுள்ளனர். சொதப்பும் சஞ்சு சாம்சன்.. இந்திய அணி தொடர்ந்து இரண்டாவது முறையாக டி20 உலகக் கோப்பையை வெல்ல முக்கிய பங்கு வகித்த சஞ்சு சாம்சன், ஐபிஎல் தொடரில் அடுத்தடுத்து மூன்று போட்டிகளில் ஒற்றை இலக்கில் விக்கெட்டை பறிகொடுத்துள்ளார். ட்ரேடிங் அடிப்படையில் ராஜஸ்தானில் இருந்து விலகி சென்னை அணியில் இணைந்த பிறகு, அவர் மீது உருவான எதிர்பார்ப்பை தற்போது வரை அவர் பூர்த்தி செய்யவில்லை. தொடக்க வீரராக அணிக்கு தேவையான தொடக்கத்தை சஞ்சு தராததும், சென்னை தொடர்ந்து மூன்று போட்டிகளில் தோல்வியுற காரணமாக உள்ளது. கடைசியாக விளையாடிய மூன்று போட்டிகளிலும் முறையே, 6,7 மற்றும் 9 ரன்களையே எடுத்துள்ளார். அவரது பேட்டிங் ஃபார்மானது ரசிகர்களை மட்டுமின்றி அணி நிர்வாகத்தையும் கவலையில் ஆழ்த்தியுள்ளது. விளையாட விருப்பமில்லையா? மோசமான ஃபார்ம் காரணமாகவே, டி20 உலகக் கோப்பையின் தொடக்கத்தில் கூட சில போட்டிகளில் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. ஆனால் இரண்டாவது பாதியில் கிடைத்த வாய்ப்பை திறம்பட பயன்படுத்தி, அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றார். எனவே இங்கு ஃபார்ம் என்பது பிரச்னையில்லை. மாறாக, போட்டியில் விளையாடுவதற்கான ஈடுபாடே சஞ்சு சாம்சனிடம் காணப்படவில்லை என்பதே ரசிகர்களின் குற்றச்சாட்டாக உள்ளது. கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பாராக தோனி பந்துவீச்சாளர்கள் மற்றும் ஃபீல்டர்களுக்கு தேவையான ஆலோசனைகள் மட்டும் வழிகாட்டுதல்களை வழங்குவார். அந்த இடத்தை நிரப்பும் வகையில் அணியில் இணைக்கப்பட்டு சஞ்சு சாம்சன், எந்தவொடு ஈடுபாட்டையும் களத்தில் காட்டவில்லை என்பதே ரசிகர்களின் கவலையாக உள்ளது. முடியலைன்னா ஒதுங்கிக்கங்க சஞ்சு.. சஞ்சு சாம்சனின் செயல்பாடு தொடர்பாக ரசிகர்கள் பலரும் தங்களத் கருத்துகளை தீவிரமாக வெளிப்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் ஒருவர் வெளியிட்டுள்ள பதிவில், “மனதளவில் நீங்கள் தயாராக இல்லை என்றால் சில போட்டிகளில் விலகி ஓய்வெடுங்கள். சற்றும் விருப்பமின்றி விளையாடுவதை போன்று உங்களது உடல்மொழி உள்ளது. அதிருப்தியிலும், அணியுடன் தொடர்பு இல்லாதவரை போன்றும் காட்சியளிக்கின்றனர். உண்மையை சொல்ல போனால் நீங்கள் ஆடுகளத்தில் சிரித்து கூட நான் ஒருமுறையும் பார்க்கவில்லை. அற்றலின்மை, சுறுப்பு மற்றும் வெற்றி பெற வேண்டும் என்ற பசி இல்லாததை தான் எங்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஈடுபாடு எங்கே? வெற்றிக்கான ஏக்கம் எங்கே? குறைந்தபட்சம் அணியின் வெற்றியில் உங்களுக்கு அக்கறை இருக்கிறது என்பதையாவது வெளிப்படுத்துங்கள்” என சிஎஸ்கே ரசிகர் கோரிக்கை விடுத்துள்ளார். பேட்ஸ்மேன் மட்டுமேவா? சஞ்சு சாம்சன் வெறும் மேட்ஸ்மேன் மற்றும் விக்கெட் கீப்பராக மட்டுமே அணிக்குள் கொண்டுவரப்படவில்லை. நீண்டகால இலக்கில் தோனிக்கான மாற்றாக சென்னை நிர்வாகத்தால் பரிசீலிக்கப்படுகிறார். இக்கட்டான நேரங்களில் பந்துவீச்சாளர்களை மாற்றுவது, அவர்களுக்கான ஆலோசனைகளை வழங்குவது, ஃபீல்டிங்கை திருத்துவது, பார்ட்-டைம் பந்துவீச்சாளர்களை பயன்படுத்துவது என, அணியின் கூட்டத்தில் எடுக்கப்பட்டதை தாண்டி, சூழலுக்கு ஏற்ற பல அதிரடி முடிவுகளை தோனி எடுப்பார். அந்த அளவிற்கு இல்லாவிட்டாலும், தற்போதைய சூழலில் சென்னை அணியில் மிகவும் அனுபவம் வாய்ந்த வீரரான சஞ்சு, தோனியின் பங்களிப்பில் பாதியை வழங்கினாலே அணியின் பல பிரச்னைகள் தீர்க்கப்படும். ஆனால், அந்த பங்களிப்பு இல்லாததே தற்போது பிரச்னையாக உள்ளது. கேப்டன் பதவிக்காக கலகமா? இதனிடையே, சென்னை அணியின் கேப்டன் பதவியை ருதுராஜ் கெய்க்வாட்டிடமிருந்து பறிக்க வேண்டும் எனவும் ரசிகர்கள் போர்க்கொடி தூக்க தொடங்கியுள்ளனர். பந்துவீச்சாளர்களை முறையாக கையாளாதது, சூழலுக்கு ஏற்ப திட்டங்களை மாற்றி அமைப்பது, சரியான முடிவுகளை எடுக்க முடியாமல், வீரர்களுக்கான பொறுப்புகளையும் நிர்ணயிக்க முடியாமல் அவர் தடுமாறுவதாக குற்றம்சாட்டப்படுகிறது. மறுமுனையில் கேப்டனாக அனுபவம் நிறைந்த சஞ்சு சாம்சன் சென்னை அணியை வாய்ப்பு கொடுக்க வேண்டும் எனவும் சிலர் கோரிக்கை வைக்கின்றனர். பதவிக்காக தான் சஞ்சு இப்படி வேண்டா வெறுப்பாக விளையாடுகிறாரோ? என சிலர் சந்தேகம் எழுப்புகின்றனர்.
இந்தச் செய்தி Abp News ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.


