சினிமாTN Election: ஊட்டியில் மீண்டும் கைகட்ட விரும்பாத விஜய் - ரீல் அப்பாக்கள் அட்டாக் - 13 மார்க் போதுமா? என கேள்வி
TN Election 2026: கடந்த சட்டமன்ற தேர்தலில் திமுக கொடுத்த வாக்குறுதிகளில் 13 சதவிகிதத்தை மட்டுமே நிறைவேற்றியுள்ளதாக, பெரம்பூர் பாமக வேட்பாளர் திலகபாமா விமர்சித்துள்ளார். பெரம்பூரில் தீவிர பரப்புரை தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் 23ம் தேதி நடைபெற உள்ளது. இதையடுத்து வேட்பாளர்களின் கள பரப்புரை தீவிரமடைந்துள்ளது. அந்த வகையில் அதிமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாமக சார்பில் சென்னை பெரம்பூர் தொகுதியில் போட்டியிடும் திலகபாமாவிற்கு ஆதரவாக பாஜக நிர்வாகி சரத்குமார் நேற்று பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது வீதிவீதியாக வாகனத்தில் நின்றபடி சென்று வாக்கு சேகரித்தார். முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த அவர், தவெக தலைவர் விஜயை கடுமையாக சாடியதோடு, ஜனநாயகன் திரைப்படம் கசிந்தது தொடர்பாகவும் பதிலளித்தார். ”விஜய் செய்தது மோசமான செயல்” கரூர் சம்பவம் தொடர்பாக பேசுகையில், ”நாங்கள் 1996 முதல் மக்களைச் சந்தித்து வருகிறோம். ஒரு அசம்பாவிதம் கூட நடந்ததில்லை. ஆனால், விஜய்யின் கூட்டத்தில் 41 பேர் இறந்ததற்கு, அவர்களின் குடும்பத்தினரை வீட்டிற்கு அழைத்துத் துக்கம் விசாரிப்பார்களா? இதைவிட ஈனமான செயல் இருக்குமா? துக்க வீட்டிற்கு வந்த இடத்தில் செல்பி எடுக்கக்கூடாது என்று ரசிகர்களைக் கட்டுப்படுத்த முடியாதவரா எதிர்காலத் தலைவர்? இலவசத்தை எதிர்ப்பேன் என்று சொன்னவர், இப்போது கார், பைக் கொடுப்பேன் என்கிறார். 10 லட்சம் கோடி கடனைச் சீர் செய்ய இவரிடம் என்ன திட்டம் இருக்கிறது? என சரத்குமார் கேள்வி எழுப்பினார். ஊட்டியை விரும்பாத விஜய் - சரத்குமார் ஜனநாயகன் திரைப்படம் கசிந்தது தொடர்பான கேள்விக்கு, “இந்த விவகாரத்தில் பாஜகவைச் சம்பந்தப்படுத்துவது அபத்தமானது. ஹார்ட் டிஸ்க் தயாரிப்பாளர் வசமே இருக்கும்போது, இதில் எப்படி எல்.முருகனுக்கு தொடர்பு இருக்கும்? இது தேவையில்லாமல் அரசியல் ஆக்கப்படுகிறது. எங்களது படத்திற்கும் இதே நிலை வந்தபோது சட்டப்படி நடவடிக்கை எடுக்கச் சொன்னோம், அதுதான் முறை” என சரத்குமார் பதிலளித்தார். மேலும், விஜய் ஏன் அதிமுகவை விமர்சிப்பதில்லை என்ற கேள்விக்கு, ”தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி வெல்வார் என்பது விஜய்க்குத் தெரியும். வம்பில் சிக்க வேண்டாம் என்பதற்காகப் பேசாமல் இருக்கலாம். மீண்டும் ஊட்டியில் கைகட்டி நிற்க வேண்டிய நிலை வந்துவிடக்கூடாது என்பதில் அவர் தெளிவாக இருக்கிறார் போல” என சரத்குமார் விமர்சித்துள்ளார். விஜயின் அரசியல் பணிகளை சினிமாவில் அவருக்கு அப்பாவாக நடித்த சத்யராஜ் ஏற்கனவே மறைமுகமாக விமர்சித்து வருகிறார். இந்த நிலையில், வாரிசு திரைப்படத்தில் விஜய் க்கு அப்பாவாக நடித்த சரத்குமாரும் இப்போது தவெக தலைவரை கடுமையாக சாடியுள்ளார். அரசுக்கு 13 மார்க் போதுமா? இதையடுத்து பரப்புரையின் போது பேசிய திலகபாமா, “2021ம் ஆண்டில் திமுகவிடம் ஆட்சியை கொண்டுபோய் கொடுத்துவிட்டோம். எப்படியோ அவர்கள் ஜெயித்து வந்துவிட்டார்கள். வந்தவர்கள் 505 வாக்குறுதிகளை கொடுத்தனர். அதில் 13 சதவிகிதம் அதாவது வெறும் 63 வாக்குறுதிகளை மட்டுமே நிறை வேற்றியுள்ளனர். 13 மார்க் எடுத்தால் பாஸா? ஃ பெயிலா? ஃபெயிலான இந்த அரசாங்கம் நமக்கு வேண்டுமா? வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்பதற்காக செலவழித்து படிக்கிறோம். ஆனால் அரசு வேலைக்கு சென்றவர்கள் நிலை என்ன? செவிலியர்கள் போராட்டம், ஆசிரியர்கள் போராட்டம், மருத்துவர்கள் போராட்டம், எல்லாருமே போராடி தான் உரிமைகளை வாங்க வேண்டுமானால் அரசாங்கம் எதற்கு? இந்த பகுதியிலிருந்து இரண்டு முறை வென்று வந்த எம்.எல்.ஏ ., எதையும் செய்யவில்லை. ஆனால் இப்போது வந்து வாக்குறுதிகளை அடுக்குகிறார். ஆனால் இரண்டு நாட்களுக்கு முன்பு ஒரு டாஸ்மாக் கடையை அடைக்க காவல்துறையை அணுகினேன் மூடினார்கள். கழிவுநீர் கால்வாய் போன்ற அடிப்படை வசதிகள் அனைத்தையும் ஏற்படுத்தி கொடுத்து, 5 ஆண்டுகள் உங்களுக்காக பணியாற்றிட வாய்ப்பு தாருங்கள்” என பெரம்பூர் தொகுதி பாமக வேட்பாளர் திலகபாமா பேசி வாக்கு சேகரித்தார்.