அரசியல்Aadhav Arjuna: மக்கள் ஓட்டுப்போட முடியாமல் போனதற்கு 3 பேர்தான் தான் காரணம்.. ஆதவ் அர்ஜுனா சொல்வது யாரை?
தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளிலும் இன்று காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. வாக்குப்பதிவிற்காக வெளியூரில் உள்ள பல்வேறு மக்களும் கடந்த ஓரிரு தினங்களாகவே வெளியூரில் இருந்து சொந்த ஊர்களுக்குச் சென்று வருகின்றனர். வாக்களிக்க செல்ல முடியாமல் அவதி: ஆனால், போதுமான அளவு பேருந்துகள் இல்லாததால் பல்லாயிரக்கணக்கான வாக்காளர்கள் பேருந்துகள் கிடைக்காமலும், கடுமையான போக்குவரத்து நெரிசலாலும் தங்களது சொந்த ஊர்களுக்கு வாக்களிக்கச் செல்ல முடியாமல் மிகுந்த சிரமத்தை அவதிப்பட்டு வருகின்றனர். வாக்களிக்கச் செல்ல முடியாமல் அவதிப்பட்ட பலரும் இணையதளங்களில் வீடியோக்களை பகிர்ந்து வருகின்றனர். தேர்தல் நேரத்தை நீட்டிக்க வேண்டும் என்று தமிழக தேர்தல் அதிகாரிகளிடம் தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் தவெக-வின் முக்கிய நிர்வாகி ஆதவ் அர்ஜுனா நேரில் சந்தித்து புகார் அளித்தனர். பின்னர், நிருபர்களுக்கு பேட்டி அளித்த ஆதவ் அர்ஜுனா கூறியதாவது, பேருந்து வசதி இல்லை: கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர் ஆகிய அனைத்து இடங்களிலும் மக்கள் அணி திரண்டு ஒரு விரல் புரட்சியாக இருக்கக்கூடிய கிட்டத்தட்ட இன்று 90 சதவீதத்திற்கும் மேல் வாக்காளர்கள் தங்கள் வாக்கை செலுத்துவதற்கு தமிழ்நாடே திரண்டுள்ளது. இந்த சந்தர்ப்பத்தில் உலகெங்கும் உள்ள தமிழர்கள் இங்கு வந்து வாக்கு செலுத்துகிறார்கள். ஆனால், நேற்று மாலை முதலே சென்னையின் பேருந்து நிலையங்கள் முடக்கப்பட்டுள்ளது. இரவு குடும்பம், குடும்பமாக கைக்குழந்தைகளுடன் பெண்களுக்கு பேருந்து வசதி கூட செய்து தர முடியவில்லை. 3 ஐஏஎஸ் அதிகாரிகள்: இத்தனைக்கும் ஒரு வாரத்திற்கு முன்பே அர்ச்சனா பட்நாயக் சுற்றறிக்கை அனுப்பியிருந்தார்கள். பொங்கலுக்கும், தீபாவளிக்கும் செய்து கொடுப்பது போல இதற்கும் செய்து கொடுத்திருக்க வேண்டும். போக்குவரத்து துறை முதன்மை செயலாளர்சிரு ஐஏஎஸ், மேலாண்மை இயக்குனர் பிரபு சங்கர், ஆர்.மோகன் உள்பட 3 ஐஏஎஸ் அதிகாரிகளுமே மக்களுக்கு சேவை செய்யும் இடத்தில் உள்ளனர். இன்றும் காபந்து முதலமைச்சராக இருக்கும் மு.க.ஸ்டாலின் பேச்சைக் கேட்கும் அதிகாரிகளாக உள்ளனர். தேர்தல் ஆணையத்தின் பேச்சை அவர்கள் கேட்பதில்லை. நேற்று இரவு லட்சக்கணக்கான மக்கள் பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக 7 மணி நேரம், 8 மணி நேரம் இப்போதும் காத்துக்கொண்டிருக்கின்றனர். சென்றவர்களும் பாதி பேர் திரும்பி வந்துக் கொண்டிருக்கிறார்கள். அனைத்து இடங்களிலும் போக்குவரத்து நெரிசல் உள்ளது. காவல்துறையினர் எந்த இடத்திலும் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தவில்லை. மு.க.ஸ்டாலினின் பயம்: மு.க.ஸ்டாலினின் பயம் என்னவென்றால் மக்கள் அதிகளவு சதவீதத்தில் வாக்களித்தால் படுதோல்வி அடைவோம் என்று காபந்து முதலமைச்சராக இருந்து கொண்டு இன்றும் சில ஐஏஎஸ் அதிகாரிகளை கட்டுப்படுத்துகின்றார். ஒரு ஐஏஎஸ் அதிகாரி கிட்டத்தட்ட 1 லட்சம் பேர், 50 ஆயிரம் பேர் உட்கார்ந்து இருக்கும்போது அவர் என்ன தூங்கிக் கொண்டு இருந்தாரா? நாங்கள் வேட்பாளர்கள் என்பதால் போக முடியாது. வீட்டில் உட்கார்ந்து தூங்குவதற்காகவா அவர்கள் 3 பேரும் வந்தனர்? லட்சக்கணக்கான மக்கள் குடும்பம், குடும்பமாக தன்னெழுச்சியாக ஜனநாயக கடமையாற்ற செல்லும்போது பேருந்து வசதி கூட செய்து தர முடியவில்லை. இந்த செயலாளர்கள் அனைவரும் 2 வருடத்திற்கு முன்பு நிர்ணயிக்கப்பட்டவர்கள். அதிகாரிகளுக்கு உத்தரவாதம் கொடுத்து வேண்டுமென்றே பேருந்துகளை செயல்படவிடாமல் தடுத்துள்ளனர். தனியார் உரிமையாளர்களிடம் நாங்கள் பேசினாேம். பேருந்துகளை முடக்கிவிட்டதாக கூறினார்கள். தமிழக மக்களுக்கு 3 அதிகாரிகள் சொல்ல வேண்டும். 2 மணி நேரம் நீட்டிக்க வேண்டும்: காலையில் சிலர் பேருந்து ஏறி இப்போதுதான் செல்கின்றனர். 2 மணி நேரம் வாக்குப்பதிவை நீட்டிக்க வேண்டும். டெல்லியில் உள்ள தலைமைத் தேர்தல் அதிகாரிக்கு எங்கள் தலைவர் ( விஜய் ) மனு கொடுத்துள்ளார். நாங்களும் இங்கு மனு கொடுத்துள்ளோம். அவர்களுக்கு மேலும் 2 மணி நேரம் வாக்களிக்க நேரத்தை நீட்டிக்க வேண்டும் என்று கூறியுள்ளோம். மு.க.ஸ்டாலின் மக்கள் ஓட்டுப்போடுவதை தடுத்து நிறுத்தியுள்ளார். அந்த 3 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
இந்தச் செய்தி Abp News ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.