மயிலாடுதுறை: தமிழக சட்டப்பேரவைக்கான பொதுத்தேர்தல் இன்று (23.04.2026) தமிழகம் முழுவதும் நடைபெற்று வரும் நிலையில், மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள மூன்று சட்டமன்றத் தொகுதிகளிலும் இன்று காலை 7:00 மணிக்கு வாக்குப்பதிவு விறுவிறுப்பாகத் தொடங்கியது. காலை முதலே பொதுமக்கள் ஆர்வத்துடன் வாக்குச்சாவடி மையங்களுக்கு வந்து நீண்ட வரிசையில் நின்று தங்கள் ஜனநாயகக் கடமையை ஆற்றி வருகின்றனர். வாக்காளர் விவரம் மற்றும் முன்னேற்பாடுகள் மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள மயிலாடுதுறை, பூம்புகார் மற்றும் சீர்காழி ஆகிய மூன்று சட்டமன்றத் தொகுதிகளிலும் சேர்த்து மொத்தம் 7,35,135 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 3,62,939 ஆண் வாக்காளர்களும், 3,72,149 பெண் வாக்காளர்களும், 47 மூன்றாம் பாலினத்தவர்களும் அடங்குவர். வாக்காளர்கள் சிரமமின்றி வாக்களிக்க ஏதுவாக மாவட்டம் முழுவதும் 951 வாக்குப்பதிவு மையங்கள் தயார் செய்யப்பட்டுள்ளன. இதில் 54 வாக்குச்சாவடி மையங்கள் 'பதற்றமானவை' எனக் கண்டறியப்பட்டு, அங்கு கூடுதல் பாதுகாப்பு மற்றும் சிசிடிவி கேமரா கண்காணிப்பு உள்ளிட்ட சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தொழில்நுட்ப வசதிகள் மற்றும் பாதுகாப்பு தேர்தல் பணிகளுக்காக 1504 வாக்குப்பதிவு இயந்திரங்கள் (EVM), 1140 கட்டுப்பாட்டு இயந்திரங்கள் (Control Units) மற்றும் 1235 விவிபேட் (VVPAT) இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. பாதுகாப்புப் பணியில் 216 மத்திய துணை ராணுவப் படையினர், வெளிமாநிலங்களிலிருந்து வரவழைக்கப்பட்ட 256 ஊர்க்காவல் படையினர் உட்பட மொத்தம் 1668 போலீஸார் மாவட்டம் முழுவதும் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். 4564 தேர்தல் பணியாளர்கள் வாக்குப்பதிவு பணிகளை ஒருங்கிணைத்து வருகின்றனர். இயந்திரக் கோளாறால் சிறு தாமதம் வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில், மாவட்டத்தின் சில இடங்களில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் ஏற்பட்ட திடீர் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக வாக்குப்பதிவு தொடங்குவதில் சிறிது தாமதம் ஏற்பட்டது. பின்னர் தேர்தல் பொறியாளர்கள் மூலம் பழுதுகள் சரிசெய்யப்பட்டு மீண்டும் வாக்குப்பதிவு தடையின்றித் தொடர்ந்தது. முக்கியப் பிரமுகர்கள் வாக்குப்பதிவு மயிலாடுதுறை சட்டமன்றத் தொகுதியில் மாவட்டத் தேர்தல் நடத்தும் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான ஸ்ரீகாந்த், தருமபுரம் ஸ்ரீ குருஞானசம்பந்தர் மேல்நிலைப்பள்ளி வாக்குச்சாவடியில் தனது வாக்கினைப் பதிவு செய்தார். அதனைத் தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின், டிஎல்சி அரசு உதவிபெறும் நடுநிலைப்பள்ளியில் வாக்களித்தார். மயிலாடுதுறை மக்களவை உறுப்பினர் வழக்கறிஞர் ஆர். சுதா, வரதாச்சாரியார் பூங்கா அரசு தொடக்கப்பள்ளியில் தனது வாக்கினைப் பதிவு செய்தார். கும்மிடிப்பூண்டியைச் சேர்ந்த இவர், கடந்த மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு தனது வாக்கினை மயிலாடுதுறைக்கு மாற்றிக்கொண்டார். வாக்களித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி தமிழகத்தில் 200-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும்" எனத் தன்னம்பிக்கை தெரிவித்தார். வேட்பாளர்கள் வாக்களிப்பு சீர்காழி: திமுக கூட்டணி சார்பில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் மதிமுக வேட்பாளர் செந்தில் செல்வன், தனது சொந்த ஊரான பெருந்தோட்டத்தில் உள்ள அரசுப் பள்ளியில் முதல் ஆளாக வந்து குடும்பத்துடன் வாக்களித்தார். அதேபோல், அதிமுக வேட்பாளர் சக்தி அவர்கள் தனது சொந்த ஊரான எருக்கூரில் வாக்கினைப் பதிவு செய்தார். பூம்புகார்: தமிழக வெற்றி கழகத்தின் வேட்பாளர் விஜயாலயன், பொறையார் ஜமாலியா பள்ளியில் தனது குடும்பத்தினருடன் வந்து வாக்களித்தார். வேட்பாளர்களின் நிலவரம் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள மூன்று தொகுதிகளிலும் சேர்த்து மொத்தம் 43 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். மயிலாடுதுறை: 20 வேட்பாளர்கள் பூம்புகார்: 13 வேட்பாளர்கள் சீர்காழி: 10 வேட்பாளர்கள் காலை நேர வாக்குப்பதிவு நிலவரம் மாவட்டத்தில் காலை 9:00 மணி நிலவரப்படி ஒட்டுமொத்தமாக 16.43 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. தொகுதி வாரியான விவரம்: மயிலாடுதுறை: 15.94% சீர்காழி: 16.14% பூம்புகார்: 17.15% வெப்பம் அதிகரிக்கும் முன்பே வாக்களிக்க வேண்டும் என்ற நோக்கில் அதிகாலையிலேயே முதியவர்கள், இளைஞர்கள் எனப் பலரும் உற்சாகமாக வாக்குச்சாவடிகளில் திரண்டு வருகின்றனர். தேர்தல் அமைதியான முறையில் நடைபெறுவதை மாவட்ட நிர்வாகம் உறுதி செய்துள்ளது.
இந்தச் செய்தி Abp News ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.


