நாசாவின் ஆர்டெமிஸ் II விண்கலம் நிலவை நோக்கிப் பயணித்தபோது எடுத்த பிரமிக்க வைக்கும் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகிவருகின்றன. ஆனால், அந்தப் புகைப்படங்களைக் கவனித்த பலருக்கும் சந்தேகம் எழுந்துள்ளது. பூமியை சுற்றி இவ்வளவு விண்வெளி குப்பைகள் இருப்பதாக சொல்லப்படுகிறதே, அவை ஏன் இந்தப் படங்களில் ஒன்றில் கூடத் தெரியவில்லை? பூமியின் சுற்றுப்பாதையில் செயலிழந்த செயற்கைக்கோள்கள் முதல் ராக்கெட் பாகங்கள் வரை பல கோடி குப்பைகள் சுற்றி வருகின்றன. இவை 'கெஸ்லர் சின்ட்ரோம்' எனும் அபாயத்தை ஏற்படுத்தக்கூடும் என விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர். அதாவது, மோதல் பல சிதறல்களை உருவாக்கி, அது தொடர்ச்சியாக மற்ற விண்கலங்களையும் தாக்கும் ஒரு சங்கிலித் தொடர் விபத்தாக மாறக்கூடும். இந்தத் துகள்கள் மணிக்கு சுமார் 17,500 மைல் வேகத்தில் பயணிக்கின்றன. ஒரு சென்டிமீட்டருக்கும் அதிகமான அளவு கொண்ட லட்சக்கணக்கான பொருட்களும், அதற்கும் குறைவான அளவில் பல கோடி நுண் துகள்களும் விண்வெளியில் மிதக்கின்றன. இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க இவ்வளவு குப்பைகள் இருந்தும் அவை புகைப்படங்களில் சிக்காததற்கு காரணங்கள் உள்ளன. பெரும்பாலான விண்வெளிக் குப்பைகள் மிக மிகச் சிறியவை. அவற்றை வெறும் கண்களால் பார்ப்பதோ அல்லது கேமராவில் துல்லியமாகப் படம் பிடிப்பதோ சாத்தியமற்றது. விண்கலமும் குப்பைகளும் அதிவேகத்தில் பயணிப்பதால், அவை கேமரா லென்ஸில் சிக்குவது கடினம். ஒருவேளை பெரிய பொருள் ஏதாவது தென்பட்டாலும், அதற்குத் தேவையான சரியான வெளிச்சமும் கோணமும் அமைவது மிக அரிது. பூமியிலிருந்து சுமார் 466 முதல் 621 மைல் வரையிலான 'புவி தாழ் வட்டப்பாதையில்' (Low Earth Orbit) தான் அதிகப்படியான குப்பைகள் குவிந்துள்ளன. ஆர்டெமிஸ் II விண்கலம் இந்தப் பகுதியைக் கடக்கும்போது, விண்வெளி வீரர்கள் மிக முக்கியமான விண்கல இயக்கப் பணிகளில் ஈடுப்பட்டிருப்பார்கள். மேலும், விண்கலம் இந்தப் பகுதியை மிகக் குறுகிய காலத்தில் கடந்து விடுவதால், அங்கே இருக்கும் பொருட்களைப் புகைப்படம் எடுப்பது நடைமுறையில் சாத்தியமில்லை. விண்வெளிக் குப்பைகள் புகைப்படங்களில் தெரியவில்லை என்பதால் அவை அங்கில்லை என்று அர்த்தமல்ல. சர்வதேச விண்வெளி நிலையம் போன்ற விண்கலங்கள் அடிக்கடி இத்தகைய சிறு துகள்களால் தாக்கப்படுவதுண்டு. விண்கலங்கள் சிறிய துகள்களின் மோதலைத் தாங்கும் வகையில் சிறப்பு கவசங்களுடன் வடிவமைக்கப்படுகின்றன. பெரிய அளவிலான பொருட்களைத் தற்கால நவீன தொழில்நுட்பங்கள் மூலம் விஞ்ஞானிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
இந்தச் செய்தி The Indian Express ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.


