கட்டுமானத்துறை இத்தனை காலமும் விடை தெரியாமல் தவித்த மிகப்பெரிய கேள்விக்கு ஜப்பானின் ஜாம்பவான் நிறுவனமான ஹோண்டா தற்போது ஒரு அதிரடி தீர்வை வழங்கியுள்ளது. உலகெங்கும் கட்டுமானத்திற்காக ஆற்று மணலையும், பாறைகளை உடைத்து எடுக்கப்படும் மணலையும் போட்டி போட்டுக்கொண்டு சுரண்டி வருகிறோம். ஆனால், கண்ணுக்கெட்டிய தூரம் வரை பரந்து விரிந்து கிடக்கும் பாலைவன மணல் இதுவரை எதற்கும் உதவாமல் வெறும் காட்சிப் பொருளாகவே இருந்தது. இனி அந்நிலை மாறப்போகிறது. பாலைவன மணல் துகள்கள் மிகவும் நுணுக்கமாகவும், உருண்டையாகவும் (Smooth and Round) இருக்கும். இதனால் அவை சிமெண்டுடன் சரியாக ஒட்டாது. பிடிமானம் இல்லாததால், அந்த மணலைக் கொண்டு கட்டப்படும் கட்டிடங்களோ அல்லது சாலைகளோ உறுதியாக இருப்பதில்லை. இதுவே அந்த மணலை நாம் ஒதுக்கி வைத்ததற்குக் காரணம். ஹோண்டா நிறுவனத்தின் புதிய ஸ்டார்ட்-அப் நிறுவனமான 'பாத்ஏஹெட்' (Patha head), இந்த சவாலை முறியடிக்க ஒரு புதிய வித்தையைக் கையாண்டுள்ளது. இந்தத் தொழில்நுட்பம், காற்றில் பறக்கும் மெல்லிய பாலைவன மணல் துகள்களை ஒருங்கிணைத்து, அவற்றை மிக உறுதியான 'செயற்கை ஜல்லிகளாக' மாற்றுகிறது. மணல் துகள்களின் வடிவத்தை மாற்றி, அவற்றைச் சீரான மற்றும் கடினமான துகள்களாக உருமாற்றுவதன் மூலம் சிமெண்டுடன் பிணைந்து வலுவான கட்டுமானத்தை இது உறுதி செய்கிறது. இந்த 'ரைசிங் சாண்ட்' முறை மூலம் அமைக்கப்படும் சாலைகள், சாதாரண சாலைகளை விட பல மடங்கு சிறந்தவை என்பது ஆய்வில் நிரூபிக்கப்பட்டுள்ளது. சாதாரண மணல் சாலைகளை விட இவை மும்மடங்கு வலிமையானவை. தற்போது நாம் பயன்படுத்தும் சாலைகள் சராசரியாக 10 ஆண்டுகள் மட்டுமே தாக்குப் பிடிக்கின்றன. ஆனால், ஹோண்டாவின் இந்தத் தொழில்நுட்ப சாலைகள் 20 ஆண்டுகள் வரை சேதமடையாமல் உழைக்கும். பராமரிப்பு மற்றும் கட்டுமானச் செலவுகளைக் கணக்கிடும்போது, சுமார் 60% வரை செலவைக் குறைக்கும். சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பு இல்லாமல், வீணாகக் கிடக்கும் பாலைவன மணலை வைத்து இவ்வளவு குறைவான செலவில் சாலைகளை அமைக்க முடியும் என்பது கட்டுமானத் துறையில் மிகப்பெரிய மைல்கல்லாகும். ஹோண்டாவின் இந்த 'ரைசிங் சாண்ட்' தொழில்நுட்பம், உலக நாடுகளின் சாலைக் கட்டமைப்பு வசதிகளை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் என்பதில் சந்தேகமில்லை.
இந்தச் செய்தி The Indian Express ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.


