தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் 233 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. தி.மு.க கூட்டணி, அ.தி.மு.க கூட்டணி, நாம் தமிழர் கட்சி, த.வெ.க என நான்கு முனைப் போட்டி நடைபெற்றது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் மாலை 6 மணியுடன் வாக்குப்பதிவு நிறைவடைந்தது. 3 மணி நேரமாக முடங்கிய வாக்குப்பதிவு: மணப்பாறை அருகே சாலை மறியலில் குதித்த கிராம மக்கள் மாலை 6 மணிக்கு முன்பாக வாக்கு மையத்திற்கு வந்தவர்களுக்கு டோக்கன்கள் வழங்கப்பட்டு அவர்கள் மட்டும் தங்கள் வாக்கைப் பதிவு செய்ய அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில், சென்னை துறைமுகம் தொகுதி வேட்பாளரும் தி.மு.க அமைச்சருமான சேகர்பாபு அவர் தொகுதியில் உள்ள ஒரு பூத்திற்கு சென்றுள்ளார். அதேபோல், அத்தொகுதியின் த.வெ.க வேட்பாளரான சினோரா அசோக்கும் அந்த பூத்திற்கு வந்துள்ளார். அப்போது, தி.மு.க-வினர் பலர் வாக்கு மையத்தின் வெளியே நின்றிருந்ததாக கூறப்படுகிறது. அதற்கு த.வெ.க-வினர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் தி.மு.க-வினரை அங்கிருந்து அப்புறப்படுத்த த.வெ.க வேட்பாளர் சினோரா அசோக் தெரிவித்துள்ளார். பின்னர் த.வெ.க-வினரும் அதிகப்படியாக அந்த இடத்தில் குவியத் தொடங்கியுள்ளனர். இதனால் இரு தரப்புக்கும் இடையே மோதல் வெடித்துள்ளது. குறிப்பாக தி.மு.க வேட்பாளர் சேகர் பாபுவுக்கும், த.வெ.க வேட்பாளர் சினோரா அசோக்கிற்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு அந்த இடம் பரபரப்பாகியுள்ளது. உடனடியாக காவல்துறையினர் தலையிட்டு இருவரையும் சமாதானம் செய்து, அவர்களை அங்கிருந்து அனுப்பிவைத்துள்ளனர்.
சென்னை துறைமுகம் தொகுதியில் பரபரப்பு... சேகர்பாபு - த.வெ.க வேட்பாளர் இடையே வெடித்த மோதல்



