உலகம்Mojtaba Khamenei Order: “போர் இன்னும் முடியல, அலெர்ட்டாவே இருங்க“; ஈரான் தலைவர் மொஜ்தபாவின் உத்தரவு கூறுவது என்ன.?
அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து, கடந்த பிப்ரவரி மாதம் 28-ம் தேதி ஈரான் மீது போர் தொடுத்தன. அந்த போர் நாளுக்கு நாள் தீவிரமடைந்து, நேற்று உச்ச கட்டத்தை எட்டியிருந்தது. இந்த நிலையில், ஈரான் முடக்கி வைத்துள்ள ஹார்முஸ் ஜலசந்தியை திறக்காவிட்டால், செவ்வாய்க்கிழமை இரவு ஈரான் முழுவதையும் அழிக்கப் போவதாக ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்திருந்தார். ஆனால், அதற்குள் ஒரு சமரச பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு, இன்று அதிகாலையில் 2 வாரங்கள் போர் நிறுத்தத்தை அறிவித்தார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப். இதைத் தொடர்ந்து, ஈரான் உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி அவர்களது ராணுவத்திற்கு உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். அது குறித்து இப்போது பார்க்கலாம். போர்நிறுத்தத்தை அறிவித்த ட்ரம்ப் அமேரிக்கா இஸ்ரேல் - ஈரான் இடையே ஒரு மாதத்திற்கும் மேலாக போர் நடைபெற்று வந்தது. ஈரான் தனது பதிலடியை, அமெரிக்க கூட்டுப்படைகளுக்கு ராணுவ தளங்களை கொடுத்து வந்த அரபு நாட்டு பகுதிகள், அதாவது, கத்தார், சவுதி அரேபியா, குவைத், துபாய், ஐக்கிய அரபு அமீரக பகுதிகளில் கடுமையான தாக்குதல்களை நடத்தி வந்தது. இந்நிலையில், ஈரானின் பயங்கர பதிலடியாலும், போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட நிலையிலும், கோபமடைந்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப், ஈரானுக்கு இறுதி எச்சரிக்கை விடுத்தார். அதன்படி, ஹார்முஸ் ஜலசந்தியை திறக்காவிட்டால், செவ்வாய்க்கிழமை இரவு ஈரான் முழுவதுமாக அழிக்கப்படும் என்று கூறியிருந்தார். அதாவது, ஈரானின் மின் மற்றும் உள்கட்டமைப்புகள் முற்றிலும் தகர்க்கப்படும் என அறிவித்து, அதற்காக அமெரிக்க கூட்டுப்படைகள் ஆயத்தமாகி வந்தன. இந்த நிலையில், ஏற்கனவே மத்தியஸ்தத்தில் ஈடுபட்டிருந்த பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளின் பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து, தாக்குதல் நடத்தவேண்டிய நேரத்தில், 2 வார போர் நிறுத்தத்தை அறிவித்தார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப். ஈரான் முன்மொழிந்துள்ள 10 அம்சங்களை பரிசீலிப்பதாகக் கூறிய அவர், ஹார்முஸை திறந்தால் மட்டுமே இந்த போர்நிறுத்தம் என்றும் கூறியிருந்தார். இதனை இஸ்ரேலும் ஏற்றுக்கொண்டது. போர் நிறுத்தத்தை ஏற்ற ஈரான் ஹார்முஸை திறக்கவும் சம்மதம் இதைத் தொடர்ந்து, ஈரானும் அமெரிக்க அதிபரின் அறிவிப்பை ஏற்பதாகக் கூறியது. அமெரிக்க தரப்பில் ஏற்கனவே முன்மொழியப்பட்ட 15 அம்சங்கள் குறித்தும் பேசலாம் என்றும் தெரிவித்தது. அதேபோல், ஹார்முஸ் ஜலசந்தையை, ஈரானிய ராணுவ மேற்பார்வையுடன் அனைத்து போக்குவரத்திற்கும் பாதுகாப்பாக திறப்பதற்கும் ஈரான் சம்மதித்துள்ளது. மேலும், பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் ஏப்ரல் 10-ம் தேதி பேச்சுவார்த்தை தொடங்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த காலகட்டத்தில் ஹார்முஸ் வழியாக கப்பல்கள் செல்ல அனுமதிப்பதாகவும் ஈரான் தெரிவித்துள்ளது. இதனால், உலக அளவில் கச்சா எண்ணெயின் விலை சரிந்ததுடன், உலக நாடுகளும் நிம்மதியடைந்துள்ளன. மொஜ்தபா கமேனியின் உத்தரவு இப்படிப்பட்ட சூழலில், ஈரான் உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி, ராணுவத்திற்கு பிறப்பித்துள்ள உத்தரவு ஒன்றில், அனைத்து ராணுவப் பிரிவுகளும் துப்பாக்கிச் சூட்டை நிறுத்த வேண்டும் என கூறியுள்ளார். எனினும், இது போரின் முடிவை குறிக்கவில்லை என்றும் கூறியுள்ள அவர், பேச்சுவார்த்தைக்காக ஒரு தற்காலிக இடைநிறுத்தம் தான் இது என்றும் தெரிவித்துள்ளார். உச்ச தலைவரின் நிலை என்ன.? ஈரான் உச்ச தலைவர் மொஜ்தபாவின் உடல்நிலை குறித்து பல்வேறு கருத்துக்கள் நிலவிவரும் சூழலில், அவரது அறிக்கைகள் ஊடகங்களில் மட்டுமே வாசிக்கப்படுகின்றன. இதனால், அவர் என்ன நிலையில் இருக்கிறார் என்பது சந்தேகத்தை எழுப்பும் வகையிலேயே உள்ளது. இதனிடையே, அமெரிக்க-இஸ்ரேல் கூட்டுப்படைகளின் தாக்குதலில் அவர் காயமடைந்து, மோசமான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக, மேற்கத்திய ஊடங்கள் செய்தி வெளியிட்டு வருவது குறிப்பிடத்தக்கது. ஈரான் உச்ச பாதுகாப்பு கவுன்சில் எச்சரிக்கை இதனிடையே, போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையிலும், தங்கள் கைகள் இன்னும் துப்பாக்கியின் விசையின் மீதே இருப்பதாக, ஈரானின் உச்ச தேசிய பாதுகாப்பு கவுன்சில் எச்சரிக்கை விடுத்துள்ளது. அது குறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில், எதிரி மிகச்சிறிய தவறை செய்தாலும், முழு பலத்துடன் நாங்கள் பதிலடி கொடுப்போம் என்று கூறியுள்ளது.
இந்தச் செய்தி Abp News ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.