தன் மகன் மீது நடவடிக்கை எடுத்த காவல்துறை அதிகாரியை, பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினர் (MLA) ப்ரீதம் சிங் லோதி பகிரங்கமாக மிரட்டும் வீடியோ வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த வாரம் எம்.எல்.ஏ-வின் மகன் ஓட்டிச் சென்ற 'தார்' (Thar) வாகனம் மோதி 5 பேர் காயமடைந்தது குறிப்பிடத்தக்கது. தனது மகன் தினேஷ் லோதி மீதான போலீஸ் விசாரணையால் ஆத்திரமடைந்த எம்.எல்.ஏ ப்ரீதம் சிங் லோதி, கரேரா பகுதி எஸ்.டி.ஓ.பி (SDOP) ஆயுஷ் ஜாக்கத்தை குறிவைத்து பேசி உள்ளார். அந்த வீடியோவில் அவர் கூறியதாவது; கரேரா எஸ்.டி.ஓ.பி பேசியதை என்னால் ஜீரணிக்க முடியவில்லை. என் மகனை மீண்டும் இங்கே பார்க்க கூடாது என அவர் எச்சரித்துள்ளார். நான் அவரிடம் கேட்கிறேன், கரேரா என்ன உங்கள் அப்பன் வீட்டு சொத்தா? வழக்கமாக நான் இப்படி பேச மாட்டேன். ஆனால் இப்போது தெளிவாகச் சொல்கிறேன்... என் மகன் மீண்டும் கரேராவுக்கு வருவான், தேர்தலிலும் போட்டியிடுவான். துணிச்சல் இருந்தால் உங்கள் தந்தை வந்து தடுக்கட்டும். மேலும், எங்க வரலாற்றை ஒருமுறை திரும்பிப் பாருங்கள். பொய் வழக்கு போட்டாலோ அல்லது ஒருதலைப்பட்சமாக விசாரணை நடத்தினாலோ நாங்க சும்மா இருக்க மாட்டோம். அதிகாரிகள் தங்கள் எல்லைக்குள் இருக்க வேண்டும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க ஏப்.16-ம் தேதி சிவபுரியின் கரேரா பகுதியில், தினேஷ் லோதி ஓட்டிச் சென்ற மஹிந்திரா தார் வாகனம், சாலையில் சென்ற 2 பெண்கள் மற்றும் மோட்டார் சைக்கிளில் வந்த 3 தொழிலாளர்கள் என மொத்தம் 5 பேர் மீது மோதியது. இதில், அனைவரும் காயமடைந்தனர். அந்த வாகனத்தில் எம்.எல்.ஏ-வின் பெயர் பலகை இருந்ததாகவும், விபத்துக்குப் பின் தினேஷ் லோதி பாதிக்கப்பட்டவர்களுடன் வாக்குவாதம் செய்ததாகவும் கூறப்படுகிறது. நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, தினேஷ் லோதி காவல் நிலையத்திற்கு வரவழைக்கப்பட்டார். விசாரணையில், அந்த வாகனத்தில் சட்ட விரோதமாக சைரன் பொருத்தப்பட்டிருந்ததும், கண்ணாடிகளில் கருப்பு பிலிம் (Black film) ஒட்டப்பட்டிருந்ததும் தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்த போலீசார், அவரது ஓட்டுநர் உரிமத்தையும் (Driving Licence) ரத்து செய்தனர். எம்.எல்.ஏ குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்த எஸ்டிஓபி ஆயுஷ் ஜாக்கத், நாங்க சட்ட விதிமுறைகளின்படியே செயல்பட்டோம். வழக்கமான விசாரணையே மேற்கொள்ளப்பட்டது. கருப்பு பிலிம், சைரன் மற்றும் உரிமம் ரத்து ஆகிய நடவடிக்கைகள் விதிகளின்படி எடுக்கப்பட்டவை என்று தெரிவித்துள்ளார். தன் மகன் மீது வழக்குப்பதிவு செய்யுமாறு போலீசாரிடம் தானே கூறியதாக எம்.எல்.ஏ லோதி கூறினாலும், தற்போது விசாரணை அதிகாரியை அவர் மிரட்டி உள்ளது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்தச் செய்தி The Indian Express ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.



