விண்வெளி ஆராய்ச்சியில் மிகப்பெரிய திருப்புமுனை ஏற்பட்டுள்ளது. சிவப்பு கோள் என்றழைக்கப்படும் செவ்வாய் கிரகத்தில், ஒரு காலத்தில் பூமியின் வெப்பமண்டல காடுகளைப் போல பலத்த மழை பெய்ததற்கான ஜியோலாஜிக்கல் பிங்கர் பிரிண்ட் எனப்படும் புவியியல் ஆதாரத்தை நாசாவின் பெர்சீவரன்ஸ் விண்கலம் கண்டறிந்துள்ளது. 2021-ல் செவ்வாயின் ஜெஸீரோ பள்ளத்தில் (Jezero Crater) தரையிறங்கிய பெர்சீவரன்ஸ், அங்குள்ள சிவப்பு நிற தூசிகளுக்கு நடுவே பளிச்சென்று மின்னும் வெள்ளை நிறப் பாறைகளைக் கண்டெடுத்தது. இது வெறும் பாறை அல்ல, செவ்வாய் கிரகத்தின் ஈரப்பதம் மிக்க கடந்த காலத்தைப் பேசும் சாட்சி. ஆராய்ச்சியாளர் அட்ரியன் ப்ரோஸ் தலைமையிலான குழு இந்தப் பாறைகளை ஆய்வு செய்தபோது, அது 'காயோலினைட்' என்ற களிமண் தாது என்பது உறுதியானது. பூமியில் இந்த வகை வெள்ளை களிமண், அமேசான் போன்ற அடர்மழைக்காடுகளில் மட்டுமே உருவாகும். பல மில்லியன் ஆண்டுகளாக பெய்யும் இடைவிடாத மழையினால் பாறைகள் அரிக்கப்பட்டு, மற்ற தாதுக்கள் நீங்கி, இறுதியில் எஞ்சியிருப்பது தான் இந்த காயோலினைட். கலிபோர்னியா மற்றும் தென்னாப்பிரிக்காவில் உள்ள மண் மாதிரிகளோடு ஒப்பிட்டபோது, செவ்வாயின் இந்த வெள்ளை பாறைகள் அப்படியே பொருந்திப் போகின்றன. இது நிலத்தடி வெப்ப நீரினால் உருவானது அல்ல, வானத்திலிருந்து கொட்டிய மழையினால் உருவானது என்பது வேதியியல் ரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்த வெள்ளை பாறைகள் கண்டெடுக்கப்பட்ட 'ஜெஸீரோ பள்ளம்', ஒரு காலத்தில் புகழ்பெற்ற 'லேக் டாஹோ'வை விட இரண்டு மடங்கு பெரிய ஏரியாக இருந்துள்ளது. இந்தப் பாறைகள் மழையினால் அடித்து வரப்பட்டு ஏரியில் படிந்திருக்கலாம் அல்லது விண்கல் மோதலின் போது தூக்கி வீசப்பட்டிருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர். இன்று செவ்வாய் கிரகம் -80 டிகிரி செல்ஷியஸ் குளிரில், காற்றில் ஈரப்பதமே இல்லாத செத்த கிரகமாகத் தோன்றலாம். ஆனால், இந்த வெள்ளை பாறைகள் ஒரு உண்மையை உரக்கச் சொல்கின்றன. இங்கே ஒரு காலத்தில் தண்ணீர் தாராளமாகப் புழங்கியது. நீர் எங்கே இருக்கிறதோ, அங்கே உயிர் இருப்பதற்கான சாத்தியம் அதிகம் என்ற விண்வெளி விதியின்படி, செவ்வாய் கிரகம் ஒரு காலத்தில் உயிரினங்கள் வாழ்வதற்கு ஏற்ற இடமாக இருந்ததை இந்த கண்டுபிடிப்பு உறுதிப்படுத்துகிறது.
இந்தச் செய்தி The Indian Express ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.


