விண்வெளியின் முடிவிலா பரப்பில் ஆயிரக்கணக்கான பொருள்கள் பூமியை சுற்றி வருகின்றன. அதில் ஒன்றுதான் இப்போது விஞ்ஞானிகளின் தூக்கத்தை கெடுத்துள்ள '2026 FF6' என்ற விண்கல். இன்று (மார்ச் 29) இது பூமியை மிக நெருக்கமாகக் கடந்து செல்லவிருப்பதாக நாசா அறிவித்து உள்ளது. இந்த விண்கல் குறித்த சில அதிரடி தகவல்கள்; ஒரு மணி நேரத்திற்கு சுமார் 44,000 மைல்கள் வேகத்தில் இது சீறிப்பாய்கிறது. அதாவது ஒரு வினாடிக்கு பல கிலோமீட்டர் தூரத்தை இது கடக்கிறது. சுமார் 110 அடி விட்டம் கொண்டது. இது ஒரு பெரிய அடுக்குமாடி குடியிருப்பு அல்லது மூன்று பேருந்துகளை வரிசையாக நிறுத்திய அளவிற்கு சமமானது. விண்வெளி கணக்கின்படி பூமிக்கு மிக அருகில் அதாவது 18,30,000 மைல்கள் தொலைவில் இது நம்மை கடக்கப்போகிறது. பூமிக்கு ஆபத்தா? விஞ்ஞானிகள் சொல்வது என்ன? "விண்கல் பூமியை நோக்கி வருகிறது" என்றதும் எழும் முதல் கேள்வி, இது மோத வாய்ப்பு உள்ளதா? என்பதுதான். தற்போதைய கணிப்பின்படி இந்த விண்கல்லால் பூமிக்கு எந்த ஆபத்தும் இல்லை. நாசாவின் விதிமுறைப்படி விண்கல் 85 மீட்டருக்கு மேல் பெரியதாகவும், 7.4 மில்லியன் கி.மீ-க்கும் மிக அருகிலும் இருந்தால் மட்டுமே அது 'ஆபத்தானது'. ஆனால், 2026 FF6 அந்த எல்லையைத் தொடவில்லை. இருப்பினும், இந்த விண்கற்கள் சூரியனைச் சுற்றும் போது அவற்றின் பாதையில் ஏற்படும் சிறு மாற்றங்கள் கூட எதிர்காலத்தில் பாதிப்பை ஏற்படுத்தலாம் என்பதால், விஞ்ஞானிகள் இமை மூடாமல் இதைக் கண்காணித்து வருகின்றனர். வெறும் கண்காணிப்போடு நிறுத்தாமல், விண்கற்களை நேரில் சென்று ஆய்வு செய்ய இஸ்ரோ (ISRO) அதிரடித் திட்டங்களை வகுத்துள்ளது. 2029-ல் பூமிக்கு மிக அருகில் வரப்போகும் 'அப்போபிஸ்' என்ற பிரமாண்ட விண்கல்லை ஆய்வுசெய்ய இந்தியா தயாராகிவருகிறது. நாசா ஐரோப்பாவின் (ESA) மற்றும் ஜப்பானின் (JAXA) விண்வெளி நிறுவனங்களுடன் இணைந்து விண்கற்களில் விண்கலத்தைத் தரைையிறக்கவும் இந்தியா திட்டமிட்டுள்ளது. விண்வெளி என்பது கணிக்க முடியாத மர்மங்கள் நிறைந்தது. 2026 FF6 போன்ற விண்கற்களின் பயணம், நாம் எவ்வளவு விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்பதை நமக்கு உணர்த்துகிறது.
இந்தச் செய்தி The Indian Express ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.



