US Iran War Negotiation: அமெரிக்கா உடனான போர் நிறுத்தம் தொடர்பாக வெள்ளிக்கிழமை முதல், பாகிஸ்தானில் பேச்சுவார்த்தை தொடங்கும் என ஈரான் அறிவித்துள்ளது. அமெரிக்கா Vs ஈரான் போர் நிறுத்தம் - பேச்சுவார்த்தை அமெரிக்கா, ஈரான் மற்றும் அதன் ஆதரவு அமைப்புகள் ஆகியவை லெபனான் உட்பட அனைத்து இடங்களிலும், போர் நிறுத்தத்தை ஒப்புக்கொண்டுள்ளதாக பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரிஃப் அறிவித்துள்ளார். ஈரானை மொத்தமாக அழித்து ஒழிக்கப்போவதாக அறிவித்திருந்த உச்சபட்ச எச்சரிக்கையை கைவிடச்செய்து, இருதரப்பிலும் நடந்து வந்த 6 வார கால மோதலை, 2 வாரங்களுக்கு நிறுத்தி வைத்ததில் பாகிஸ்தான் முக்கிய பங்கு வகித்துள்ளது. இதையடுத்து இரண்டு தரப்பில் உள்ள பிரச்னைகள் குறித்து பேசி, இந்த போரை முழுவதுமாக முடிவுக்கு கொண்டு வருவதற்கான பேச்சுவார்த்தையை நடத்த, வரும் 10ம் தேதி இஸ்லாமாபாத்திற்கு வருமாறு அமெரிக்கா மற்றும் ஈரான் பிரதிநிதிகளுக்கு பாகிஸ்தான் அழைப்பு விடுத்துள்ளது. ஏப்ரல் 10ம் தேதி பாகிஸ்தானில் முடிவு? போர் நிறுத்தம் மற்றும் பேச்சுவார்த்தை தொடர்பாக ஷெபாஸ் ஷெரிஃப் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தாக்குதல்களை நிறுத்திக் கொள்ளும் விவேகமான நடவடிக்கையை வரவேற்பதோடு, இரு நாட்டு தலைமைகளுக்கும் ஆழ்ந்த நடவடிக்கையை தெரிவித்துக்கொள்கிறேன். இருதரப்பினரும் அறிவு மற்றும் புரிதலை வெளிப்படுத்தி அமைதி மற்றும் நிலைத்தன்மையை முன்னெடுத்து செல்வதில் ஆக்கப்பூர்வமாக ஈடுபட்டுள்ளனர். வரும் ஏப்ரல் 10ம் தேதி இஸ்லாமாபாத்தில் நடைபெற உள்ள பேச்சுவார்த்தையில், இருதரப்பும் பல நல்ல செய்திகளை பகிர்ந்துகொள்ள வேண்டுமென விரும்புகிறோம்” என தெரிவித்துள்ளார். USA-வின் 15 VS ஈரானின் 10 - யார் கை ஓங்கும்? அமெரிக்கா தனது 15 அம்ச முன்மொழிவின் அடிப்படையிலும், தாங்கள் முன்வைத்த 10 அம்ச கோரிக்கைகள் அடிப்படையிலும் பேச்சுவார்த்தை நடத்த ஒப்புக்கொண்டதன் அடிப்படையில், இரண்டு வார கால போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக ஈரான் தெரிவித்துள்ளது. அந்நாடு வைத்துள்ள 10 முன்மொழிவுகள் என்பது, ஈராக், லெபனான் மற்றும் ஏமன் மீதான போரை முழுமையாக கைவிடுதல் ஈரான் மீதான போரை முழுமையாகவும், நிரந்தரமாகவும் காலவரையின்றி நிறுத்துதல் பிராந்தியத்தில் நிலவும் அனைத்து மோதல்களையும் முழுமையாக முடிவுக்கு கொண்டு வருதல் ஹார்மஸ் நீர்வழிப்பாதையை முழுமையாக பயன்பாட்டிற்கு கொண்டு வருவது ஹார்மஸ் ஜலசந்தி வழியான கப்பல் போக்குவரத்தில் சுதந்திரம் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான நெறிமுறைகளை வகுத்தல் ஈரானின் மறுகட்டமைப்புக்கான முழு செலவுகளையும் இழப்பீட்டு தொகையாக வழங்குவது ஈரான் மீதான அனைத்து பொருளாதார தடைகளையும் முழுமையாக அகற்றுவது அமெரிக்கா வசமுள்ள ஈரானிய நிதிகள் மற்றும் முடக்கப்பட்ட சொத்துகளை விடுவிப்பது எந்தவொரு அணு ஆயுதத்தையும் கைவசம் வைத்திருக்க மாட்டோம் என ஈரான் முழுமையாக உறுதி அளிக்கிறது மேற்கண்ட நிபந்தனைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டால் அனைத்து முனைகளிலும் போர் முற்றிலுமாக நிறுத்தப்படும் என ஈரான் தனது 10 அம்ச பட்டியலை வெளியிட்டுள்ளது. மறுமுனையில் அமெரிக்காவானது, ஈரானின் அணு ஆயுதம் திட்டத்தை கைவிடுவது ஏவுகணை உருவாக்கத்தில் கட்டுப்பாடுகளை விதிப்பது ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறப்பதற்கு உத்தரவாதம் அளித்தல் பிராந்திய ஆயுத குழுக்களுக்கான ஆதரவை நிறுத்துவது பொருளாதாரத் தடைகளை படிப்படியாக நீக்குதல் உள்ளிட்ட 15 அம்சங்கள் அடங்கிய பேச்சுவார்த்தையை முன்னெடுத்துள்ளதாம். ஈரான் சொல்வது என்ன? ஈரானின் முழு மனித நாகரீகமே செவ்வாய்கிழமை இரவு அழிக்கப்படும் என ட்ரம்ப் எச்சரித்து இருந்தார். இந்த பகிரங்க மிரட்டலுக்கு அவரது சொந்த ஆதரவாளர்கள், எதிர்க்கட்சியினர் மற்றும் அமெரிக்காவின் முதல் போப் ஆகியோரிடமிருந்து கடும் கண்டனங்கள் குவிந்தன. அதன் பிறகு பாகிஸ்தானின் முன்மொழிவை ஏற்று தாக்குதலை நிறுத்தி வைப்பதாக ட்ரம்ப் அறிவித்தார். இதனை ஏற்றுக்கொள்வதாக அறிவித்தாலும், இது போரை முழுமையாக முடித்துக்கொள்வதற்கான அறிவிப்பு இல்லை என ஈரான் விளக்கமளித்துள்ளது. மேலும், எதிரியால் செய்யப்படும் சிறு தவறுக்கும், முழு பலத்துடன் பதிலடி அளிக்கப்படும் என ஈரான் எச்சரித்துள்ளது.
இந்தச் செய்தி Abp News ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.



